சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள்.


சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் வகையில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது மின்னணுக் குப்பைகள். மின்குப்பைகளை உருவாக்குவதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பதே அச்சத்தை ஏற்படுத்தும் புள்ளி விபரம்.


 வற்றை அகற்றுவதற்கு முறையான வழிமுறைகளை உருவாக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாகியும், சில நிறுவனங்கள் மெத்தன போக்கைக் கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரண்டாம் இடத்தில் தமிழகம்: அறிவியல் தொழில் நுட்பம் ஒருபுறம் வளர்ச்சி பெற்று பிரம்மிப்பை ஏற்படுத்தினாலும், அதனால் உருவாகும் கழிவுகள், பிரமிடுகளை மிஞ்சும் அளவிற்கு உயர்ந்து நம்மை அச்சுறுத்த செய்கின்றன.
இந்தியாவில் 5 கோடி டன் மின்குப்பைகள் சேர்வதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, மின்குப்பைகள் உருவாக்குவதில் மகாராஷ்ட்ரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக கூறி, தமிழர்களின் தலையில் இடியை இறக்குகிறது சமீபத்திய புள்ளி விபரம்.
இவ்வாறு உருவாகும் மின்குப்பையில், 5 சதவிகிதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்பட்டுகிறது. மீதமுள்ள குப்பைகள், மண்ணுக்குச் சென்று, மனிதர்களுக்கு ஆபத்தை உருவாக்குவதாக எச்சரிக்கின்றது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.
வெளிப்படும் வேதிப்பொருட்கள்: ஒரு கம்யூட்டர் தயாரிக்க அதிகளவில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதனை எரிக்கும் போது வெளிவரும் டயாக்சின், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. பேட்டரி தயாரிக்க பயன்படுத்தப்படும் பாதரசம், மண்ணிலோ, நீரிலோ கலக்கும் போது மனிதனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், காரீயம், குரோமியம் 6, பெரிலியம் கேட்மியம், உள்ளிட்ட பல வேதி பொருட்கள் மின்குப்பைகளிலிருந்து வெளிப்படுகின்றன. இதனால், உடல் உறுப்புகள் பாதிப்பு, டி.என்.ஏ. மூலக்கூறுகள் பாதிப்பு போன்ற மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை மறுசுழற்சி செய்யும் அமைப்புகளும் ஆமோதிக்கின்றன.
சமூக பொறுப்புடன் செயல்படுவோம்:சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சரியான சட்ட வழிகாட்டுதல்களும், முறையான திட்டமிடல்களும் தேவை என மறுசுழற்சி செய்யும் அமைப்பினர் கூறுகின்றனர். எனவே, உபயோகித்து முடிந்த மின்னணு சாதனங்களை தெருவில் கொட்டாமல், மக்கும், மக்காத குப்பை என்று தரம்பிரித்து மறுசுழற்சி செய்யும் அமைப்புகளிடம் ஒப்படைக்குமாறும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


***********************************************************************************************************************************************


பூமியைக் காக்கும் ஓசோனின் அளவு







            சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம். கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள 'அடுக்கு வாயு மண்டலத்தில்' தான் ஓசோன் உள்ளது.
   1840ல் ஜெர்மன் அறிஞர் பிரடரிக் ஸ்கான் பெயின், ஓசோனைக் கண்டறிந்தார். ஓசோனின் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். பூமியைக் காக்கும் ஓசோனின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதை அறிஞர்கள் கண்டறிந்தனர்.
   இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் 'மான்ட்ரீல் ஒப்பந்தம்' எனும் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் பின் ஓசோன் துளை அளவு குறைந்திருந்தது. எனினும் இதே நிலை நீடித்தால் 2050வது ஆண்டுக்குள் ஓசோன் துளை மறைந்துவிடும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர். மான்ட்ரீல் ஒப்பந்தத்தை குறிக்கும் வகையில், செப்.16ல் 'சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது. ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, இத்தினத்தின் நோக்கம்.
என்ன காரணம்:
      ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு, நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் தான் முக்கியக் காரணம். குறிப்பாக, குளோரோ புளோரோ கார்பன் (சி.எப்.சி.,) எனும் குளிரூட்டிப் பொருளே ஓசோனைச் சிதைத்து, அதன் அளவைக் குறைப்பதில் முதல் இடத்தில் உள்ளது. ஏ.சி., நெயில் பாலிஸ், லிப்ஸ்டிக், தீயணைப்புக் கருவி, 'ஸ்பிரேஸ்' போன்றவற்றில் இக்கார்பன், குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சி.எப்.சி., ஓசோன் பகுதியை அடைந்ததும், புறஊதாக் கதிர்களால் தாக்கப்பட்டு, குளோரினைத் தோற்றுவிக்கிறது. இந்தக் குளோரினே, ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கிறது. ஒரு சி.எப்.சி., மூலக்கூறு, ஆயிரம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கக் கூடியது. அதனால் இதை 'ஓசோன் கொல்லி' என்கின்றனர்.
என்ன பாதிப்பு:
  • ஓசோன் அளவு குறைந்தால், பூமியின் வெப்பம் உயரும்.
  • துருவப்பகுதிகளில் பனி உருகி, கடலின் நீர் மட்டம் உயரும்.
  • தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும்.
  • ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.
  • இக்கதிர்கள், கடல் உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் உள்ள பிளாங்டான் எனும் மிதவை உயிரினங்களை, எளிதில் கொல்லும்.
  • இவை அழிவதால், மற்ற கடல் உயிரிகள் இல்லாமல் போகும் அபாயம் உருவாகும்.

                                                    -பசுமை நாயகன்